Desikan
Tuesday, 15.03.05
முழுமையான நேர்காணல் - மனுஷ்ய புத்திரன்
இன்று பிறந்த நாள் காணும் நண்பர் அப்துல் ஹமீது ( கவிஞர் மனுஷ்ய புத்திரன்) அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
தீராநதி மார்ச் இதழில் கவிஞர் மனுஷ்ய புத்திரனின் நேர்காணல் வெளியாகியிருக்கிறது. அப்பேட்டியில் சில பகுதிகள் வெளியிடவில்லை. இந்த பதிவில் வாசகர்களுக்கு முழுமையாக பிரசுரிக்கப்படுகிறது. இனி மனுஷ்ய புத்திரன் நேர்காணல் ...
தீராநதி: 1983லில் வெளிவந்த உங்களது 'மனுஷ்ய புத்திரனின் கவிதைகள்' தொகுப்பிலிருந்து 2005இல் வெளிவந்த ஐந்தாவது தொகுப்பான 'மணலின் கதை' வரை உங்கள் கவிதைச் செயல்பாட்டில் காணப்படும் தொடர்ச்சியும் மாற்றமும் என்ன?
நான் மிகவும் இளமைக் காலத்தில் எழுதத் தொடங்கி அவை பிரசுர வாய்ப்பையும் பெற்றுவிட்டன. நான் உருவாகி வந்த பாதைகள் அனைத்திற்குமான தடயங்கள் அச்சுவடிவில் இருக்கின்றன. என்னுடைய சூழலில் பெரிய பத்திரிகைகளின் வழியே வந்து சேரும் எழுத்துக்கள் மட்டுமே ஒரே வாசிப்பனுபவமாக அப்போது இருந்தது. வைரமுத்துவும் மு.மேத்தாவும் அந்தச் சூழலில் கொடிகட்டிப் பறந்தார்கள். அவர்கள் இருவருமே மிகவும் எளிமையான சுலபமாக யாரும் உருவாக்கிவிடக்கூடிய கவிதை மாதிரியை உருவாக்கினார்கள். என்னுடைய முதல் தொகுப்பும் அந்த வகைமாதிரியிலிருந்து பிறந்ததுதான். ஒரு காலகட்டத்தில் இது தவிர்க்கவே முடியாத ஒருவிதி. உள்ளீடற்ற சமூக அக்கறைகளும் கற்பனாவாதமும் மிகுந்த அம்மொழியிலிருந்து விடுபட முதலில் பெரியாரியமும் வெகு சீக்கிரத்தில் மார்க்சியமும் உதவி செய்தன. தீவிர இடதுசாரிப் பார்வைகொண்ட கவிதைகளை மன ஓசை, புதிய கலாசாரம் இதழ்களில் எழுதினேன்.
எண்பதுகளின் பிற்பகுதி எனது அரசியல் நம்பிக்கைகளிலும் தனிப்பட்ட வாழ்க்கையிலும் கடும் வீழ்ச்சிகளை சந்தித்த காலம். என் மன அமைப்பு சிதைந்து வேறொன்றாக உருமாறிக் கொண்டிருந்தது. என் கவிதையின் மொழியும் உள்ளடக்கமும் மாறத் தொடங்கியது. நான் அந்தக் கவிதைகளை மன ஓசைக்கு அனுப்பினேன். அவை வெளியிடப்படவில்லை. மாறாக மன ஓசை ஆசிரியர் குழுவுக்கும் எனக்கும் ஒரு நீண்ட கடிதப் பரிவர்த்தனை நடந்தது. புரட்சிக்கும் தனிமனித வாழ்க்கைக்கும் இடையிலான முரண்பாடுகள் பற்றிய பிரச்சினைகள் அவை. நான் மிகவும் மனம் சோர்ந்து போனேன். அப்போது கோவை ஞானியின் தொடர்பின் மூலம் சிறுபத்திரிகைகளுடனான அறிமுகம் கிடைத்தது. அது எனக்கு மிகப் பெரிய ஆசுவாசமாக இருந்தது. கோவை ஞானி என் கவிதைகளை நிகழ் இதழில் தொடர்ச்சியாக வெளியிட்டார். அது என் எழுத்து வாழ்க்கையில் மிக முக்கியமான திருப்பம். அங்கிருந்துதான் நவீன இலக்கியம் தொடர்பான எனது எல்லாப் பாதைகளும் துவங்கின.
எனது முதல் கவிதைத் தொகுப்பிற்கும் ஐந்தாவது கவிதைத் தொகுப்பிற்குமான இந்த நீண்ட தொலைவில் சொல்முறைகளிலும் அர்த்த தளங்களிலும் பல்வேறு மாறுதல்களையும் உடைப்புகளையும் இக்கவிதைகள் சந்தித்திருக்கின்றன. ஆனால் இக்கவிதைகள் அனைத்தும் தீர்க்கவே முடியாத நிம்மதியின்மையையும் கேவல்களையும்தான் திரும்பத் திரும்ப சொல்லி வந்திருக்கின்றன. இவை அவற்றை எழுதுகிறவனின் கேவல்கள் மட்டுமல்ல, வேறு எப்படியும் இருக்கமுடியாத, பொய்யான நம்பிக்கைகளுக்குகூட சாத்தியமற்ற ஒரு தலைமுறையின் சுய அழிவுப் பாடல்கள். மேலும் இக்கவிதைகள் ஒரு வாசகனின் முன்னிலையை திட்டவட்டமாக நிறுத்தி எழுதப்பட்டவை. உரையாடலின் சாத்தியங்களைத் தொடர்ந்து விரிவுபடுத்தவே இக்கவிதைகளில் முயன்றிருக்கிறேன். சில சமயம் அது மயானத்தின் தனித்த அழுகுரல். சில சமயம் மலைகளில் எதிரொலித்து பள்ளத்தாக்குகளைக் கடந்து செல்லும் நீண்ட அழைப்பு.
Monday, 14.03.05
தேவதைக் கிறுக்கல்கள்...
ஆனந்த விகடன் 27.2.05 இதழில் என் சிறுகதை பற்றிக் கேள்விப்பட்டு, ஏஞ்சல் அனாமிகாவின் தாய் பிரமிளா சுகுமார் ஓர் உருக்கமான கடிதம் எழுதி, அனாமிகாவின் "தேவதைக் கிறுக்கல்கள்" புத்தகத்தையும் இணைத்து அனுப்பி இருந்தார்.
தன் நாய்க் குட்டிகளுக்கு ஜீனோ, பூக்குட்டி என்று பெயர்கள் வைத்த அந்தப் பெண், பதினான்கு வயதில் சுனாமியால் மறைந்து போய்விட்டாள் என்கிற செய்தியின் சோகத்துடன் படிக்கும் போது, இந்தக் கிறுக்கல்களில் சில சமயம் ஒரு premonition அதாவது, நடக்கவிருப்பதை முன்கூட்டியே உணரும் தன்மை இருப்பது தெரிகிறது ("எப்பொழுது இறப்போம், மறுபடியும் பிறப்போமா?").
தந்தையின் பாசத்துடனும், தாயின் இலக்கிய ஆர்வத்துடனும், தங்கள் நாட்டின் சுதந்திர தாகத்துடனும் வளர்க்கப்பட்ட பெண்ணின் ஆசைகள், கனவுகள், வியப்புகள், சித்திரங்கள் எல்லாமே பாசாங்கற்ற Ôதேவதைக் கிறுக்கல்கள்’ ஆகின்றன.
மழை பெய்யும்பொழுது
எங்கள் வீட்டு விறாந்தையில்
இருந்துகொண்டு
மழையைப் பார்த்துக்கொண்டு
கிட்டார் வாசிக்க ஆசை.
நான் சாப்பிடுவதை
அழகு பார்க்கும் அம்மா
தொலைபேசியில்
Ôசொல்லுடாÕ என
மெல்லக் கிள்ளிவிடும்
அப்பா.
அவளுள் வசித்த தேவதை விடைபெறுவதற்கு முன், அவள் விடைபெற்றுவிட்டாள். இந்தத் தாய்க்கு நான் என்ன ஆறுதல் சொல்வது? அனாமிகாவின் நினைவை நிரந்தரமாக்க, அவளத்த பெண்களுக்கு ஒரு விருது அறிவிக்குமாறும், படைப்புகளைத் தேர்ந்தெடுக்க உதவுவதாகவும் யோசனை சொல்லியிருக்கிறேன்.
(தேவதைக் கிறுக்கல்கள், ஏஞ்சல் அனாமிகா, பாலசுகுமார் பதிப்பகத்தின் முகவரி இல்லை. விலை இல்லை. balasugumar@yahoo.com க்கு மின்னஞ்சல் அனுப்பினால் பிரதி கிடைக்கலாம்.)
இந்த வார கற்றதும் பெற்றதும்
-சுஜாதா
நன்றி: ஆனந்த விகடன்
இதை பற்றிய என் முந்தைய பதிவுகள்
Thursday, 10.03.05
விடைபெறுதல் - கவிதை - மனுஷ்ய புத்திரன்
வந்துவிட்டது நீ போக
வேண்டிய ரயில்.
தண்டவாளங்களில் படபடக்கின்றன
கிழிக்கப்பட்ட பாலிதீன் உறைகள்
யாரோ ஒரு பயணி
சிமெண்ட் பெஞ்சில் விட்டுச் சென்ற
பத்திரிகை
காற்றில்
தன்னைத் தானே வாசிக்கிறது
நான் உனக்காக கையசைக்கையில்
ஒரு குழந்தை வேறொரு பெட்டியிலிருந்து
என்னை நோக்கி கையசைக்கிறது.
-- மனுஷ்ய புத்திரன்
பிகு: இது நண்பர் மனுஷ்ய புத்திரன் நேற்று எழுதிய கவிதை
Picture Courtesy: http://www.kernelthread.com/
( © 1994-2005 Amit Singh )
Monday, 28.02.05
அனாமிகா - சிறுகதை சுஜாதா
அனாமிகா - சிறுகதை சுஜாதா படிக்க இங்கே கிளிக் செய்யவும்.
http://www.desikan.com/blogcms/wiki/index.php?id=s_s_anamika
Thursday, 24.02.05
பெரியார் & ©

என் அப்பாவிற்கு பிரபந்தத்தில் எவ்வளவு ஈடுபாடோ அதே போல் பெரியாரிடத்திலும் ஈடுபாடு உண்டு. எனக்கு பெரியாரின் கருத்துக்கள் மீது மதிப்பு வர காரணம் என் அப்பா தான். ஒரு முறை என்னிடம் "ஒரு பெரியார் படம் வரையேன்டா" என்றார். வரைந்தேன்(பார்க்க படம்). அந்த பெரியார் படத்தை வீட்டு வரவேற்பரையில் ஸ்ரீரங்கநாதருடைய படத்தின் பக்கத்தில் மாட்டினார். எங்கள் வீட்டுக்கு வந்த பலர் இதற்கு ஆட்சேபம் தெரிவித்தார்கள். ஆனால் என் அப்பா அதை கண்டுகொள்ளவில்லை.
சமீபத்தில் கலைஞன் பதிப்பகத்திற்கு சென்றிருந்தேன். அங்கு பி.சி.கணேசன் எழுதிய
"பெரியார் ஒரு சகாப்தம்" என்ற புத்தகத்தில் நான் வரைந்த ஓவியம் அட்டைப்படமாக
இடம்பெற்றிருந்ததைகண்டேன். நம்முடைய ஒரு படைப்பை யாருடையதைப் போன்றோ சந்திக்கும் 'இன்ப அனுபவத்தை' வாழ்க்கையில் முதன்முதலாகக் கண்டேன். உள்ளே "அட்டை படம்" என்று வேறு யாருடைய பெயரோ இருந்தது. அங்கு உள்ள மேனேஜரிடம் இதை பற்றி கேட்டேன். என்னை ஒரு முறை உற்றுப் பார்த்துவிட்டு, தலையை ஒரு முறை ஆட்டிவிட்டு ஏதோ கணக்கு எழுத ஆரம்பித்துவிட்டார்.
நான் வரைந்த படத்தை ஒருவர் உபயோகிப்பதில் எனக்கு ஆட்சேபணை இல்லை. ஆனால் எங்காவது ஒரு மூலையில் அதை வரைந்த ஆளின் பெயரைப் போடுவதில் என்ன மனச் சிக்கல் இருக்கிறது என்று எனக்குப் புரியவில்லை.
காலேஜில் இரண்டாம் ஆண்டு படித்துக்கொண்டிருக்கும் போது, ஆசிரியர் எங்களுக்கு Text Bookகை பார்த்து நோட்ஸ் கொடுத்துக்கொண்டிருந்தார். எல்லோரும் அமைதியாக நோட்ஸ் எழுதிக்கொண்டிருந்தோம். என் பக்கத்து மாணவன் நோட்ஸ் எழுதாமல் இருந்தான். ஆசிரியர் அவனை பார்த்து "ஏம்பா நீ நோட்ஸ் எழுதவில்லை ?" என்று கோபமாக கேட்டார். அதற்கு அந்த மாணவன் அந்த புத்தகத்தை அவரிடம் வாங்கி இரண்டாம் பக்கத்தில் கீழே பொடிசு எழுத்தில் உள்ளதை படித்துக் காண்பித்தான். ஆசிரியர் அதற்கு பிறகு எங்களுக்கு நோட்ஸ் கொடுப்பதை நிறுத்திவிட்டார். அந்த வாசகம் ...
[...All rights reserved. No part of this book may be reproduced, or transmitted in any form or by any means electronic, mechanical,
photocopying, recording or otherwise. without the written permission ....]
Newer articles:
07.04.2005
06.04.2005
05.04.2005
- நானும் ஒரு டஜன் பெண்களும் [comments: 1] 22.08.07 17:50
04.04.2005
29.03.2005
Older articles:
23.02.2005
- மு.ராமசாமி + அ.ராமசாமி = ஈ.வெ.ராமசாமி [comments: 1] 01.02.07 22:14
22.02.2005
- பெண்களூர்-0 5 [comments: 5] 30.08.09 15:52
17.02.2005
15.02.2005
- ரயில் பிரயாணத்தின் கதை - ரயில் பயணங்களில் [comments: 1] 28.09.05 17:07
14.02.2005
- அது அந்தக் காலம் [comments: 1] 12.06.06 00:09





13:32:00 -







